மன்னார் -நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ஒருவர் ஆற்றில் நீராட சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் நான்கு கிராம சேவையாளர் உட்பட ஆறு பேர் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இன்று(29) மதியம் 12 மணியளவில் அவர்களில் நால்வர் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் இழுக்கப்பட்ட அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுழிக்குள் இழுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை கிராம மக்கள் மற்றும் கடற்படையினர் தேடி வருகின்றார்கள்.வருட இறுதி கொண்டாட்டத்திற்கு சென்றவர்கள் உயிலங்குளம், வங்காலை, கட்டைக்காடு முசலி போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் குளித்த இடத்தில் மதுப் போத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கிராம சேவையாளர்கள் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் காணாமல் போன கிராம சேவையாளரை தோடும் பணி இடம் பெற்று வருகின்றது.
காணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என்று நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்